50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

256 0

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 89 லட்சத்து 13 ஆயிரத்து 524 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்து 8 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 503 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 47 லட்சம் 37 ஆயிரத்து 951 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 571 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் அங்கு 968 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,21,980
பிரேசில் – 50,058
இங்கிலாந்து – 42,589
ஸ்பெயின் – 28,322
இத்தாலி – 34,610
மெக்சிகோ – 20,781
பிரான்ஸ் – 29,633
இந்தியா – 12,948