பூநகரி வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

217 0

கிளிநொச்சி – பூநகரி – மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் 661வது இராணுவ முகாம் அருகே இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமைடந்துள்ளார்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

சம்பவத்தில் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த செ.தவராஞ்சன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். அத்துடன் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த செ.வசந்தகுமார் (வயது 41) என்ற 4 பிள்ளைகளின் தந்தை காயமடைந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது அப்பகுதியில் கூடிய மக்கள், விபத்து நடந்த இடத்தில் இருந்து டிப்பரை இராணுவம் அகற்ற முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இச்சமயத்தில் பொது மக்களை சமூக இடைவெளி பேண இராணுவத்தினர் வலியுறுத்திய போது பிரதேசவாசியொருவர் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.