தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களுக்குப் பாதகம் செய்யவில்லையாம்!

229 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒருபோதும் தமிழ் மக்களுக்குப் பாதகம் செய்யவில்லையென,  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து, ஊடகவியலாளர்களுக்கு இன்று (08) கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், “பேரினவாத, அதிகார வர்க்கத்தின் தேவைக்காக, அவர்களின் எடுபிடிகளாக இருந்து, ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், தொண்டர் அமைப்பினர் போன்றவர்களைக்  கடத்தி, காணாமல்  செய்யும் பாதகமான செயலை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை” என்றார்.

அத்துடன், “இலங்கைத் தமிழரசுக்கட்சியாக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக காலத்தின் தேவைக்கேற்ப எமது கட்சி, மாற்றத்துடன், வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

“இக்கட்சி எவற்றைச் செய்தது என்பதை பல தடவைகள் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். அதேபோல், எமது கட்சி எவற்றைச் செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

“ஊழல், மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகம், பாலியல் பலாத்காரம், கட்சி தாவுதல், வன்முறைகள் போன்ற செயல்களில் எமது கட்சி ஈடுபடவில்லை.

“தமிழ் இளைஞர், யுவதிகளை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்துக் கைதிகளாக்கி விட்டு, அவர்களை விடுவிப்பது போல் நாடகமாடவில்லை.

“மொத்தத்தில் எமது கட்சியினரின் நடவடிக்கைகள், தமிழினத்துக்குப் பாதகமாகவோ, துரோகமாகவோ அமையவில்லை.  முக்கியமாக, எமது எதிராளர்களிடம் எமது இனத்தை நாம் காட்டிக் கொடுக்கவில்லை”  என்றார்.