சிறிலங்காவில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தோல்வியடைந்துள்ளது – ரணில்

248 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதென எதிர்க்கட்சி தீர்மானித்தது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் நாளாந்தம் ஐயாயிரம் பி.சீ.ஆர். பரிசோதனைகளை நடத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை 75,239 பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதெனவும் அரசியல் இலாபம் பெறும் நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திற்குக் காணப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் சாடியுள்ளார்.

இவை அனைத்திற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியினால் 230 மில்லியன் டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்த முன்னாள் பிரதமர், அந்த 230 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பழைய மதுபானங்களை விற்றுள்ளதாகவும் இவையனைத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு எனவும் முன்னாள் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.