இலங்கையில் வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை?

339 0

korn-mmap-md-648x330வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில், அந்நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அந்நாட்டு தேசிய வைத்திய முறைமை, இலங்கை ஆயுர்வேத வைத்திய முறைமையுடன் இணைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதேவேளை, ஆயுர்வேத வைத்தியர்கள், ஆங்கில மருத்துவ முறையிலான மாத்திரைகளை, நோயாளர்களுக்கு வழங்குவதை, முற்றாக நிறுத்திவிட வேண்டும் என்று, புதிதாக சேவையில் இணைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் 107 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வின் போது, அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட சில ஆயுர்வேத வைத்தியர்கள், ஆங்கில மருந்துகளையும் நோயாளர்களுக்கு வழங்கி வருவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வாறான நடவடிக்கைகளை அந்த வைத்தியர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர். “தேசிய வைத்திய முறைமையை அபிவிருத்தி செய்வதில், ஆயுர்வேத வைத்தியர்கள், அதிக சிரத்தையுடன் நடவடிக்கை வேண்டும். எமது நாட்டு தேசிய வைத்திய முறைமைக்கு, நல்ல வரவேற்பு உள்ளது.

அதனால், இந்த முறைமையை அபிவிருத்தி செய்ய, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேசிய வைத்தியர்கள், ஆங்கில மருத்துவ முறைமையைக் கற்றுக்கொண்ட வைத்தியர்களை விட மிகவும் பொறுப்புவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில்  900 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்குமான நியமனக் கடிதங்கள், வெகு விரைவில் வழங்கப்படும். ஆயுர்வேத சபை, ஆயுர்வேதத் திணைக்களம் ஆகியவற்றை, தற்காலத்துக்கு ஏற்றவாறான வகையில் அபிவிருத்தி செய்யப்படும்” என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.