தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும்

257 0

201611200752205714_rain-likely-to-southern-tn_secvpfதென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டுள்ளதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும். தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 17-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இது வலுப்பெற்றுள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக வலுப்பெற்று இந்திய பெருங்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரம், பாம்பன், குழித்துறை ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.