நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர்கள் உட்பட அனைவருக்கும் வீரவணக்கம்

242 0

639816190sivajilingamமாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை. நல்லூர் ஆலய முன்றலில் உயிரிழந்த மாவீரர்கள் உட்பட அனைவருக்கும் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துவோம் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்று(19) யாழ் ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்ற போது, மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டால்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்குப் பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போரிலே உயிரிழந்த மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த வகையில், இறுதி நாளான 27 ஆம் திகதி நல்லூர் ஆலய முன்றலில் அனுஷ்டிக்கப்படும்.

மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அன்றைய தினம் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தினை செலுத்த முடியும். ஒன்று கூட முடியாதவர்கள் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தாம் விரும்பும் பொது இடத்தில் மற்றும் வீடுகளில் வீரவணக்கத்தினைச் செலுத்த முடியும் என்பதுடன் வீரவணக்கத்தினைச் செலுத்த வேண்டும்.

உலகில் வாழும் ஈழத் தமிழர்கள் மாத்திரமன்றி தமிழர்களும் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. 1971 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தினை மேற்கொண்ட ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் தற்போது அந்த நினைவு தினங்களை அனுஷ்டித்து வருகின்றார்கள்.

எமது மக்களை பயத்தில் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இறந்த ஒருவரை நினைவு கூருவது எமது உரிமை. இந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்றார்.