மத்திய அரசை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்- திருநாவுக்கரசர்

302 0

201611181302394745_currency-note-issue-condemning-the-central-government-on-21_secvpf500, 1000 ரூபாய் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எந்தவித அவசர சட்டமோ, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களோ இல்லாமல் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து நாட்டு மக்கள் மிது துல்லிய தாக்குதலை நரேந்திர மோடி நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 120 கோடி மக்களும் கடுமையாக பாதிக்கிற வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.

நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவிப்பதினால் ஏற்படுகிற விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் கருப்பு பணத்தை ஒழிக்கிற மாவீரனாக தன்னை காட்டிக் கொள்வதற்காக இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கையை பிரதமர் எடுத்திருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

நாள்தோறும் பல்வேறு விதமான அறிவிப்புகள். முதலில் 4,000 ரூபாய், பிறகு 4,500 ரூபாய், இப்போது திடீரென 2,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம் என்று துக்ளக் பாணியில் தினம் தினம் அறிவிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் குழப்ப நிலை நீடித்து வருகிறது.

நேற்றைய அறிவிப்பின் மூலம் திருமணத்திற்காக ரூபாய் இரண்டரை லட்சம், விவசாயிகள் வாரத்திற்கு ரூபாய் 25 ஆயிரம், வணிகர்கள் ரூபாய் 50 ஆயிரம் என வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற நடவடிக்கையாக கருதப்படு கிறது.

ஒரு பவுன் விலை 22 ஆயிரம் ரூபாய் விற்கின்ற நிலையில் இரண்டரை லட்சம் ரூபாயில் திருமணம் நடத்த முடியுமா ? ஆனால் நாட்டு மக்கள் 500 ரூபாய்க்கு வங்கிகளின் வாசலில் காத்திருக்கும் அவல நிலையில் கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரூபாய் 650 கோடி செலவில் நேற்று ஆடம்பர திருமணம் நடத்தியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய தொகையை எந்த வங்கியில், எப்படி பெற்றார், எந்த வங்கியில் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார் என்று ஏழை எளிய மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

அதேபோல, தமிழகத்தில் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்;ச்சி வங்கிகள் இருக்கின்றன. 3 கோடியே 28 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். இதில் 1 கோடியே 88 லட்சம் பேர் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். கிராமப் புறங்களில் அனைத்து பரிமாற்றங்களும் கூட்டுறவு வங்கிகள் மூலமாகத் தான் நடைபெறுகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியும், நபார்டு வங்கியும் மற்ற வங்கிகளைப் போல 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றவோ, டெபாசிட்டுகளாக பெற வோக் கூடாது என பிறப் பித்த உத்தரவு கிராமப் புற விவசாயிகளை கடுமை யாக வஞ்சிக்கிற நடவடிக்கை யாகும்.

63 தொழிலதிபர்களின் கடன் தொகையான ரூபாய் 7016 கோடியையும் தள்ளுபடி செய்துள்ளது. வங்கிகளிடம் கடன் வாங்கி, ஏமாற்றி மோசடி செய்யும் தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்கிற மத்திய பா.ஜ.க. அரசு, மத்திய காங்கிரஸ் அரசு செய்ததைப் போல விவசாயிகளின் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய தயாராக இல்லை.

நரேந்திர மோடியின் அறிவிப்பால் நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலில் இருந்து ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காகவும், அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்காகவும் மாவட்ட, வட்டார, நகர, பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற 21.11.2016 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதன்மூலம் தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிற வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.