ஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது

318 0

ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதியில் நேற்றுமாலை முதல் விடாதுபெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்காக இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தொடர்மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.