சிறிலங்காவில் ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் மேலும் சில வசதிகள்

307 0

சிறிலங்காவில் ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கிணங்க ரயில் பயணிகளுக்கு இன்று முதல் பருவச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்நிலையில், பயணிகள் தமது நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை சமர்ப்பித்து பருவச்சீட்டுக்களைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஊரடங்கு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரச தனியார் நிறுவனங்களின் பணிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையிலும் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.