இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி

288 0
இளம் ஊடகவியாளர் ஒருவர், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லற்றில், நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாரென,  களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை, இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 21 வயது ரகுநாதன் மிதுன்சங்கர் எனும் இந்த ஊடகவியலாளர், வந்தாறுமூலையிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

தனது சக ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவருடன் 2 மோட்டார் சைக்கிளில் நால்வரும் கல்லாற்றிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் கோவிலுக்கு  முன் வீதியோரமாக தரிது நின்றுள்ளனர். அங்கு பொருள்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமொன்றும், மேற்படி ஊடகவியலாளர் நின்றிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் மோதியதாக, விபத்தை நேரில் கண்ட, அவரது சக நண்பர்கள் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, உழவு இயந்திரத்தைக் கைப்பற்றி, அதன் சாரதியைக் கைது செய்துள்ளனர்.