சிசுவை நாய்க்கு இரையாக்கிய கொடூரத்தாய் கைது

320 0

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவு, ஆனைகட்டியவெளி, கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்தி செய்யும் இடத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், அதனை நாய்க்கு இறையாக்கிய சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசுவின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிசுவின் சடலம் உடலின் கீழ் பகுதியற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

‘குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில்புரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக வீட்டுக்கு வந்து சென்ற ஒருவராலேயே குறித்த பெண் தாய்மையடைந்துள்ளார். நேற்று குறித்த குழந்தையினை வீட்டுக்கு அருகில் பிரசவித்த நிலையில் அதனை கைவிட்டுள்ளார். இதன்போது அப்பகுதி நாய்கள் குறித்த குழந்தையினை இழுத்துச் சென்றுள்ளது’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினைக் கொண்டிருந்த நபரினையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி,நீதிபதி ஆகியோரின் விசாரணைகளை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அன்னையர் தினமான நேற்று இவ்வாறு தாய்மையினை மிகவும் மலினப்படுத்தும் வகையிலான சம்பவம் இடம்பெற்றமை அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது