சம்மாந்துறையில் சிறுவர்கள் இருவர் மரணம்

262 0
பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற 3, 6 வயதுடைய சிறுவர்கள் இருவர், கிணறு போன்ற பாதுகாப்பற்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளனரென, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு – 3 பகுதியில், நேற்று (09) மாலை  இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், சிராஜ் சிபாம் (வயது 6) சிராஜ் ரிஸ்ஹி (வயது 3) ஆகிய சகோதரர்களே மரணித்துள்ளனர்.

சிறுவர்களது சடலங்கள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர் தலைமையில் இன்று (10) சென்ற குழுவினர், அம்பாறையில் இருந்து வருகைதந்த தடயவியல் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்கி, சிறுவர்கள் வீழ்ந்த கிணறு, சுற்றுச்சூழலில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகினறனர்.

உயிரிழந்த சிறுவர்களின் தந்தை, வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடோன்றில் பணி புரிந்து வருகின்றார். தாய், சிற்றுண்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வேளை சிறுவர்கள் இருவரும் அருகிலுள்ள சிறுவர்கள் பட்டம் விடுவதைப் பார்வையிட குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற சிறுவர்கள், நேற்று (09) மாலை 4.30 மணியளவில் குழியில் தவறி  விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சிறுவர்கள் வீழ்ந்த கிணறு போன்ற குழி உள்ள பகுதி, அவர்களின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

சிறுவர்களை, குழியிலிருந்து மீட்டு, வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட போதும், அச்சிறுவர்கள்  ஸ்தலத்திலேயே மரணித்துள்ளனரென, சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனீபா தெரிவித்தார்.