அமெரிக்காவில் அநியாய விலைக்கு பொருட்களை விற்ற இந்தியர் மீது வழக்கு

306 0

அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அநியாய விலைக்கு விற்பனை செய்த இந்தியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் பிளசன்டன் என்ற இடத்தில் அப்னா பஜார் என்ற பெயரில் இந்தியரான ராஜ்விந்தர் சிங் என்பவர் பிரபலமான மளிகைக்கடையை நடத்தி வந்தார்.

இவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அநியாய விலைக்கு, அதுவும் 200 சதவீதம் அளவுக்கு விலைகளை உயர்த்தி விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் பலரும், அங்கு பொருட்களை வாங்கிய ரசீதுடன் புகார் செய்தனர். அந்த புகார் மீது அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல உணவுப்பொருட்கள், நெருக்கடி காலத்தில் அனுமதிக்கப்பட்ட 10 சதவீத விலை அதிகரிப்பையும் தாண்டி, 200 சதவீத அதிகரிப்புடன் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜ்விந்தர் சிங் மீது அலமேடா கவுண்டி சுபீரியர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரையில் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7½ லட்சம்) வரை அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது.