சோதனைச் சாவடி இராணுவத்தினரின் செயற்பாடுகள் வித்தியாசமாக உள்ளது- சார்ள்ஸ்

373 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஓர் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகளில் உள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பேச்சுக்கள் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் குறிப்பிடுகையில், “தற்போதைய நிலைமையில் இராணுவ மற்றும் பொலிஸாரின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் குருணாகல் பகுதியில் பார்க்கின்றபோது அங்குள்ள சோதனைச் சாவடியில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனைச் சாவடிக்கு வருபவர்களுடன் சிறந்த முறையில் பேசுகின்றனர்.

ஆனால், வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரும் பொலிஸாரும் மக்களுடன் அச்சத்தினை ஏற்படுத்தும் விதமாகப் பேசுகின்றனர்.

யுத்த பாதிப்புக்குள்ளாகியுள்ள இப்பிரதேச மக்களுடன் இவ்வாறு கதைப்பது அல்லது பயத்தை ஏற்படுத்தும் தோரணையில் பேசுவது ஏற்புடையதல்ல. ஒரே தேசத்தவர் என வாழ்கின்ற எமக்கு இது நல்லதாக அமையாது” எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த இராணுவ அதிகாரி, “இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் இந்த கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக எந்த வேளையிலும் உங்களது கருத்துக்களை எனக்கோ அல்லது பிரதி பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ தெரிவிக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.