ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும்!

358 0

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்கு காரணம் ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன.

தற்போது அவை சரி செய்யப்பட்டு இன்றிலிருந்து பரிசோதனைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும். அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திலும் யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றன.

நாம் தற்போது உள்ள சூழ்நிலையில் இது எமக்கு முக்கியமான ஒன்று. இந்த பரிசோதானையானது மிகவும் அவதானமாகவும் சரியான முறையிலும் முன்னெடுக்கப்படுகின்றது. நாம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை பின்பற்றியே மேற்கொள்கின்றோம்.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் சிகிச்சைக்காக எமது வைத்தியசாலை சூழலுக்கு வரும்போதுதான் மிகவும் அபாயகரமான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றது.

குறிப்பாக தொற்றுக்குள்ளானவர் முழுமையாக தனது சுய விபரங்களை வெளியிடாது விட்டால், வைத்தியசாலையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனினும் நாம் ஆய்வு கூடங்களில் செய்கின்ற பரிசோதனைகள் அனைத்தும் மிக அவதானமாக செய்யப்படுகின்றன. அங்கு தொற்று ஏற்பட மிக மிக குறைவு இதனை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதிலும் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இன்னும் சில நாட்களில் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம். பல்கலைக்கழக மாணவர்கள் வரலாம்.

அவ்வாறு பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது பரிசோதனைகளுக்கு எவ்வித தடங்கலும் வரக்கூடாது. ஏனெனில் எமது பகுதிகளில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் இடம்பெற்று எங்கள் பிரதேசங்களில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே இதற்கு யாரும் தடங்கல் ஏற்படுத்திவிடக் கூடாது. ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும். அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் வைத்திய சேவையை பொறுத்த மட்டில் இப்போது எமக்கு முக்கிய தேவையாக இந்த பரிசோதனை உள்ளது.

இங்கு மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவருக்கு தொற்று இல்லை என்றால், இல்லை தொற்று உள்ளது என உறுதிப்பட்டால் மிகவும் அவதானமாக நாம் செயற்படவேண்டும். அவரை சிகிச்சைக்கு அனுப்புகின்றோம். அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துகின்றோம்.

பல்கலைக்கழகங்கள் என்பது ஆராய்ச்சிகளை செய்து உண்மையான தகவல்களை வெளியிடுகின்ற ஓர் நிறுவனம் இவ்வாறான ஆராய்ச்சி நிலையங்களில்தான் உண்மையான தகவல்கள் வெளியிடப்படுகின்றது.

யாழ் போதனாவில் இடம்பெறுகின்ற பரிசோதனையில் பல்கலை மருத்துவ பீடத்தின் பங்களிப்பு உள்ளது. மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறவில்லை.

அதற்கு காரணம் ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன. தற்போது அவை சரி செய்யப்பட்டு இன்றிலிருந்து பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இந்த இரு இடங்களிலும் பரிசோதனைகள் இடம்பெறும். அதில் மக்கள் எவ்வித குழப்பமும் அடையத்தேவையில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.