சிறிலங்காவில் ஊரடங்கு தளர்வு- மலையகத்தில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பிரசன்னம்!

298 0

சிறிலங்காவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.

எனினும், அண்மைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர். அத்துடன், தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 3 அல்லது 4 இருப்பவர்களையே, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அந்த நடைமுறையை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை.

அதேபோல், பொதுப் போக்குவரத்தின்போது எவ்வாறு செயற்படவேண்டும் என விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களையும் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவில்லை. ஒருசில அரச மற்றும் தனியார் பேருந்துகளில் உரிய வகைளில் நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.

நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன், நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை, நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இதேநிலைமைதான் காணப்பட்டது.

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சுகாதார மற்றும் அடையாள அட்டை நடைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனை வழங்கி பொதுநலன் கருதி செயற்படுமாறு வலியுறுத்தினர்.

அதேவேளை, மேற்படி நகரங்களில் சதொச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்தனர். மருந்தகங்களுக்கு முன்னாலும் நீண்ட வரிசை இருந்தது.

பெருமபலானவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தாலும், ஒரு சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதையும் காணமுடிந்தது.

குறிப்பாக ஹற்றன் நகரில் ஒருசில நடைபாதை வியாபாரிகளும் எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாமலேயே வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்