இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 29435 ஆக அதிகரிப்பு

306 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29435 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 934 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29435 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1543 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 62 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆக உயர்ந்துள்ளது. 6869 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3548 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 162 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 3108 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.