கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் 5 பேர் கைது

380 0

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மலேசியா சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது.

இதன்போது குறித்த வீட்டினை உடைத்து அங்கு சென்ற கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணணி, மின்னழுத்தி, வாயு அடுப்பு, சிலிண்டர், அவண், மிக்ஸ்சி, தண்ணீர் பில்டர், கிளாஸ், கரண்டி உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கடந்த வாரம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானாவடு அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரனித் திஸாநாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் சந்தன (45769), பொலிஸ் கான்ரபிள்களான சமீர (75038), ரணசிங்க (75642), தயாளன் (91792) உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தேக்கவத்தை, கற்குழி, நெளுக்குளம், மகாறம்பைக்குளம், கோவில்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் 18 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட தேக்கவத்தை, நெளுக்குளம், மகாறம்பைக்குளம் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.