நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை கொட்ட முயற்சித்த நிறுவனம்- யாழில் சம்பவம்

327 0

மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம்-பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது.

நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்கு தடைவிதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் கட்டளை வழங்கியிருந்தது. அந்தக் கட்டளையை மீறி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கல்லுண்டாய் பகுதியில் மலக்கழிவுகளை கொட்டிவந்தன.

இந்நிலையில் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகருடன் கல்லுண்டாய் பகுதிக்குச் சென்ற மக்கள், அங்கு தனியார் நிறுவனம் ஒன்று பவுசரில் ஏற்றி வந்த மலக்கழிவுகளை கொட்டுவதற்கு முயற்சித்த வேளை தடுத்து நிறுத்தினர்.

அந்த பவுசரை தடுத்து வைத்திருந்த மக்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் அதனை ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.