யாழ். நகரில் 10 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் திருடி விற்பனை- 8 பேர் கைது!

279 0

யாழ். நகரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களைம் திருடியவர்களையும் திருடிய பொருட்களை வாங்கியவர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டிடம் நிர்மாணிக்கும் இடத்தில் இருந்து 5 இலட்சம் பெறுமதியான கட்டிடப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன் யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள கடைகளிலும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இவ்வாறு 3 இடங்களில் இலத்திரனியல் பொருட்களைத் திருடிய, நாவாந்துறை, பொம்மைவெளி மற்றும் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த சுமார் 8 பேரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.