மட்டக்களப்பில் அரிசிக்கு சாயம் பூசிய வர்த்தகர்!

292 0

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார்.

செயற்கையாக சிகப்பு நிறச்சாயமூட்டிய அரிசியை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் அதிகம் உடைந்த அரிசியை உணவு நியம ஒழுங்கு விதிக்கு முரணாக விற்பனைக்காக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவருக்கெதிராக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் முதலாம் திகதியன்று நடாத்தப்பட்ட தற்காலிக சந்தையில் காணப்பட்ட அரிசி மாதிரியை ஆதாரமாகக் கொண்டு அந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்ட விற்பனை நிலையம் மறுநாள் சுகாதார திணைக்கள அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 9 மூடை அரிசி முத்திரையிடப்பட்டதுடன், அதில் சிறிய தொகுதி அரிசி தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டது. அங்கு நடாத்தப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அரிசி நிறமூட்டப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.