எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு கொன்ற நாய்

444 0

மதுரையில் எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு கொன்ற நாய் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் ஒன்றரை வயதான புல்லி குட்டா என்ற இனத்தைச் சேர்ந்த நாயை பாசத்துடன் வளர்த்து வந்தனர். அதற்கு ‘தாரா’ என செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தனர். அந்த நாய் வெளி ஆட்கள் யாரையும் அவ்வளவு எளிதாக வீட்டில் நுழைய விடாமல் காவல் காப்பதில் கில்லாடியாக இருந்து வந்தது.இந்த நிலையில் வீட்டில் குடும்பத்தினர் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்த நாய் வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தத்துடன் குரைத்துக் கொண்டு வீட்டை சுற்றி ஓடியது. இதை கவனித்த குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அந்த நாய் சென்றது.

மேலும் குடும்பத்தினரை கார் ஷெட்டின் அருகில் அந்த நாய் வரவிடவில்லை. அப்போது அங்கு பார்த்தபோது கண்ணாடி விரியன் வகை கொண்ட பாம்பு புகுந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த நாய், குடும்பத்தினரை காப்பாற்ற நினைத்து பாம்புடன் சண்டையிட்டது. அந்தப் பாம்பு கடித்ததில் பல இடங்களில் அந்த நாய்க்கு காயங்கள் ஏற்பட்டன. இது போல் நாய் கடித்து குதறியதில் பாம்பு அங்கேயே செத்துவிட்டது.

இதனை தொடர்ந்து காயம்பட்ட அந்த நாயை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். நாயை பரிசோதித்த கால்நடை டாக்டர் மெரில்ராஜ், நாய்க்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் நாய் கோமா நிலையில் உள்ளது.

தன் உயிரை பணயம் வைத்து தனது எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய அந்த நாயின் நன்றியுணர்வை அறிந்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்தனர்.