ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை எடுத்து வந்து பின்னர் இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட குழுவில் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய தமிழர் ஒருவரும் உள்ளதாக, சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், ஆவா குழுவுக்கு இலங்கை இராணுவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் விடயத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது என, இங்கு கருத்து வௌியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.