பறக்கும் கேமரா மூலம் கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க முடிவு

305 0

கொரோனா பரவலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பறக்கும் கேமராவை பயன்படுத்த சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையுடன் இணைந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைத்து நோய் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பறக்கும் கேமராவை பயன்படுத்த சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு 14 நாட்களுக்கு பிறகே தெரிய வருகிறது. இதனால் அதனை தடுப்பது பெரிய சவாலாகவே உள்ளது. இந்த 14 நாட்களுக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவி விடுகிறது.

இதையடுத்து கொரோனா தொற்று இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பறக்கும் கேமராக்கள் மூலமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கொரோனா நோயை கண்டுபிடிக்கும் அகசிவப்பு கதிர்களை பாய்ச்சும் கேமரா டிரோன்களில் இணைக்கப்பட்டு பறக்க விடப்படும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இண்டர்நெட் இணைப்பு மூலம் கம்ப்யூட்டரில் பார்க்க முடியும்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் நடமாடினால் அவர் மீது இந்த கதிர்கள் பாய்ந்து காட்டி கொடுத்து விடும்.

98.5 பாரன்ஹூட் வெப்ப நிலையை தாண்டி அதிக உடல் வெப்பத்துடன் வெளியில் சுற்றுபவர்கள் இந்த நவீன கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள். அவர்களின் புகைப்படத்துடன் கம்ப்யூட்டரில் எச்சரிக்கை தகவல்களை உடனடியாக வழங்கி விடும்.

இதனை கம்ப்யூட்டரில் பார்த்து காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். சாதாரண பறக்கும் கேமராக்கள் மூலம் காட்சிகளை மட்டுமே போலீசார் பதிவு செய்து வந்த நிலையில் இந்த நவீன பறக்கும் கேமரா கொரோனா பாதித்த நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க உதவும் என்று போலீசாரும், சுகாதாரத்துறையினரும் நம்புகிறார்கள்.

கொரோனா அறிகுறியுடன் வெளியில் சுற்றுபவர்களை இந்த நவீன கேமராவை பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகளை சென்னை மாநகர போலீசார் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு இருந்தனர்.

கோயம்பேடு மார்க்கெட், மண்ணடி, திருவொற்றியூர், மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், தண்டையார்பேட்டை, அபிராமபுரம், திருவல்லிக்கேணி, ராயபுரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நவீன கேமராக்களை பயன்படுத்தி சோதனை ஓட்டமும் நடைபெற்று உள்ளது.

முதல் கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கேமரா மூலம் கண்காணிக்கும் போது கொரோனா தொற்றுடன் வெளியில் சுற்றுபவர்கள் சிக்கி கொள்வார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை பிடிப்பதற்காக ஏற்கனவே பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த சென்னை மாநகர போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது காலையில் நேரத்தில் குறைவதே இல்லை.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 15 ஆயிரம் சிறு வியாபாரிகள் காய்கறி வாங்குவதற்காக வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது கொரோனா இருந்தால் உடனடியாக மற்றவர்களுக்கு வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

இதையடுத்து கொரோனாவை கண்டுபிடிக்கும் கேமராவை கோயம்பேட்டில் இருந்து பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இன்னும் சில தினங்களில் அதுபயன்பாட்டுக்கு வரும்.

இதேபோன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மண்ணடி, பாரிமுனை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 100 இடங்களிலும் இந்த பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற கேமராக்களை ராணுவத்தினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் பயன்படுத்துகிறார்கள்.

நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு இப்போதுதான் முதல் முறையாக கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.