மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விடுபட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

395 0

மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும் என சிறிலங்காவின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தேசப்பற்றுள்ள ஒரு இளம் சட்டத்தரணியாவார்.

மனிதாபிமான பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பிலும் சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளின்போதும் மிகவும் துடிப்புடன் செயற்பட்டு, நீதிக்காக போராடி வருகின்றவர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியலமைப்புக்கு விரோதமான  ஆட்சி மாற்றத்தின்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், உயர் நீதிமன்றில் நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்வதில் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் சிறிலங்காவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் திட்டமிட்ட வன்முறைகளை எதிர்த்து துணிந்து போராடிய சட்டத்தரணியாக திகழ்ந்தவர்.

இந்நிலையில் அவர்மீது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கிலே ஏப்ரல் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அரசாங்கம் அவரை கைது செய்திருக்கின்றது.

இது இந்த அரசாங்கத்தின் மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். இந்த மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும்.

மேலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு அரசாங்கம் இனவாதத்தை கட்டவிழ்த்துவிடாது, நாட்டை மிக மோசமாக பாதிப்புறச் செய்திருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை  உளத்தூய்மையுடன்  மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக்கொள்ள விரும்புகிறேன்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.