ட்ரம்பின் வெற்றியை சிங்கள மக்கள் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம்

291 0

gotabaya_ciஅமெரிக்காவின் பெரும்பான்மையின மக்கள் ரொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியதைப்போல், சிறீலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் அதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த, பேராசிரியர் நளின் டி சில்வா எழுதிய, ‘எனது உலகத்தில் 30ஆண்டுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்கத் தேர்தலில் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த ரொனால்ட் ட்ரம்பிற்கு, எதிரணியினருடன் தொக்கி நிற்கும் சிறுபான்மையினரே தடையாக இருந்தனர். இதனால் அவர் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறி எழுந்துநின்றது.

ஆனால் அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரது அரசியல் கொள்கைகள் சிறந்தவை. இதனால் சிறீலங்கா போன்ற சிறிய நாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

அமெரிக்க வாக்காளர்களின் பக்கத்திலிருந்து பார்க்கும் போதும், அந்நாட்டு புத்திஜீவிகள் கருத்துக்களின் அடிப்படையில் இருந்து பார்க்கும் போதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவு ட்ரம்பிற்கு கிடைக்கவில்லை. எனவே அவர் தோல்வி அடையப்போவது உறுதி என்று கூறப்பட்டது. அத்துடன், கறுப்பின மக்களின் ஆதவும் அவருக்குக் கிடைக்காது என்ற கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

இந்நிலையில், அந்நாட்டு வெள்ளையின மக்கள் ஒன்றுதிரண்டு ரொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்ததனால் அவர் சுலபமாக வெற்றிபெற்றார்.

இதனை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களும் ஒரு பாடமாக கொள்ள வேண்டும். இதனால் உருவாக்கப்பட்ட கருத்தியலே மிக முக்கியமானதாகும்.

பெரும்பான்மையினரின் ஆதரவினால் மாத்திரம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால், அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையினர் வலுப்பெற்றாலே சிறுபான்மையினரும் வலுப்பெறுவர். இந்தப் பாடத்தை அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

மனித உரிமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. எமது நாட்டு மக்களிடத்தில் மனித உரிமைகள் இயல்பாவே நிறைந்துள்ளன.

ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இல்லாத பல விடயங்களை மனித உரிமைகள் என்ற பேரில் எமது நாட்டினுள் புகுத்த பார்க்கின்றது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.

இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமையும் எனவும் தெரிவித்தார்.