மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தில் ஊழல் – நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!

266 0

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், இந்த திட்டத்திற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2.5 பில்லியனுக்கு வழங்கிய ஒப்பந்தம் கடந்த ஐ.தே.க. அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டு 3.5 பில்லியன்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே ஏன் அதிக விலைக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை விரைவாக மேற்கொள்ள தற்போதைய அரசாங்கம் முயற்சித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் மீரிகமவை குருநாகலுடன் இணைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.