ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 17 கைதிகள் யாழில் விடுதலை!

254 0

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்.

நாடுமுழுவதும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு,நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும்.

வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள், கொள்ளை மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்த பட்டியலில் இல்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.