பெண் ஊழியர்களுக்கு பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு

290 0

infant-529x360அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.தமிழக சட்டசபையில் கடந்த 1.9.2016 அன்று, பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2011-ம் ஆண்டில் நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, 1980-ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.

எங்களது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசுப் பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணிப் பாதுகாக்கும் வகையில் பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.இந்த நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா, நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 16.5.2011 தேதியிட்ட அரசாணையின்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டது.

இந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த காலகட்டத்தை பிரித்து எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அந்த பெண் ஊழியரையே சாரும்.

இந்த சூழ்நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1.9.2016 அன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு கவனமுடன் ஆய்வு செய்து புதிய உத்தரவை அரசு பிறப்பிக்கிறது.

அதன்படி, 2 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு, 6 மாதங்களில் (180 நாட்கள்) இருந்து 9 மாதங்களாக (270 நாட்கள்) உயர்த்தப்படுகிறது.

இந்த விடுப்பு காலம், அவர்களின் பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தையும், குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குணப்படும் காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். 270 நாட்கள் தொடர்ச்சியாக அளிக்கப்படும் இந்த விடுமுறையை, என்றிலிருந்து எடுக்கவேண்டும் என்று முடிவு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அந்தப் பெண் ஊழியருக்கு வழங்கப்படுகிறது.

இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அவர்களும் 270 நாட்கள் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த புதிய அரசாணை உடனடியாக அமலுக்கு வருகிறது.