மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு நியமனம்

234 0

வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.

 

வடமராட்சி கிழக்குப் பகுதிகளான குடத்தனை, பொற்பனை மற்றும் மணற்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெருமளவான மணல் சட்டத்துக்குப் புறம்பாக அகழப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது என்று மக்களால் அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்வைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களால் தெரிவிக்கப்படும் அதேவேளை, மக்கள் களத்தில் இறங்கி மணல் கடத்தல்களைத் தடுத்து வருகின்றனர்.

கடந்த  திங்கட்கிழமை அந்தப் பகுதிகளில் இடம்பெறும் மணல் கடத்தல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது மணல் கடத்தல் கும்பலால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து கும்பலால் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ரிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்டு சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத சந்தர்ப்பத்தில் இந்த பொலிஸ் குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.