ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் இனவாத கருத்துக்கள் மறைந்திருந்தன. இனவாதத்தை தூண்டிக்கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது. அத்துடன் புதிய அரச தலைவருக்கு வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதிக்கு மாத்திரம் உரியதல்ல. அதனை பாதுகாப்பது அனைவரதும் கடமை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கை யில்,
மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுபவர்கள் என எம்மை விமர்சிக்கின்றவர்கள், 77 வருடங்களுக்கு பின்னர் மேற்கத்திய கலாசார ஆடையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பாராளுமன்ற சிம்மாசன உரையை நிகழ்தியது தொடர்பில் விமர்சிக்கவில்லை. அவர் அரை கை சட்டையுடன் பாராளுமன்றத்துக்கு வருவாரோ என்ற அச்சம் எமக்கிருந்தது. என்றாலும் மேற்கத்திய கலாசார ஆடையில் வந்தமை அவதானிக்கத்தக்கது.
பாராளுமன்ற கெளரவத்தை பாதுகாத்துக்கொண்டு முன் செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் தற்போது அரசாங்க தரப்பில் இருப்பவர்கள்தான் அன்று பாராளுமன்றத்தை அகெளரவப்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர் என்பதை ஜனாதிபதி தெரிந்துகொள்ளவேண்டும்.
அரசாங்கத்தின் பிரதம கொறடாவே அன்று சபாநாயகரின் மேசையில் இருந்த புனித வேதாகமத்தை வீசி எறிந்து தாக்குதலை மேற்கொண்டார். அதனால் பாராளுமன்ற கெளரவத்தை பாதுகாக்க ஆரம்பமாக அரசாங்க தரப்பினரே எதிர்க்கட்சிக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதேபோன்று வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். ஆனால் நாங்கள் வறுமை நிலையில் இருக்கும் 6இலட்சம் பேருக்கு சமுர்தி நிவாரணம் வழங்கியிருந்தோம். அந்த சமுர்த்தி பயனாளிகளின் நிவாரணத்தை அரசாங்கம் இல்லாமலாக்கி இருக்கின்றது.
ஜனாதிபதி எளிமையான போக்கை கடைப்பிடிப்பதாக தெரிவித்து சில நடைமுறைகளை பின்பற்றுகின்றார். ஆனால் அதில் குறிப்பிட்ட வரையறை இருக்கவேண்டும். புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்துக்கு வந்து அவரது சிம்மாசன உரையை நிகழ்த்த வரும்போது அதற்காக மேற்கொள்ளவேண்டிய பாராளுமன்ற சம்பிரதாயங்கள் இருக்கின்றன. ஜனாதிபதிக்கான கெளரவ அணிவகுப்பு மரியாதை என்பது ஜனாதிபதிக்கு மாத்திரம் உரியதல்ல. அது பாராளுமன்றத்துக்குரிய கெளரவம். அணிவகுப்பு மரியாதையில் ஈடுபடும் இராணுவத்துக்கு வழங்கும் கெளரவம். அதேபோன்று அதனை கண்டுகளிக்கும் பொது மக்களுக்கான வரப்பிரசாதமாகும். அதனை நாங்கள் பாதுகாக்கவேண்டும். அரசாங்கத்தின் செலவை குறைப்பதாக தெரிவித்து வருடாந்தம் இடம்பெறும் தலதா மாளிகை பெரஹராவை நிறுத்த முடியாது. பெரஹராவை நிறுத்தினால் பாரியளவில் செலவை குறைக்கலாம். ஆனால் அது செய்ய முடியாத காரியமாகும். அந்த சம்பிரதாயங்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஜனாதிபதியின் எண்ணம் நல்லதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் இனவாத கருத்துக்கள் மறைந்திருந்தன. தேர்தல் மேடைகளில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெறவேண்டும் என்றே அந்த தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொண்டே செயற்பட்டோம். ஆனால் ஜனாதிபதி பதவியேற்று நடத்திய உரையின்போது சிறுபான்மை மக்கள் தன்னுடன் இணைந்து செல்ல முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றார். அத்துடன் அவரது சிம்மாசன உரையிலும் சிங்கள பெளத்தத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவது என்ற கருத்திலே உரையாற்றியிருந்தார்.
நாட்டில் இனவாதம் மதவாதத்தை பரப்பிக்கொண்டு நீண்டதூரம் பயணிக்க முடியாது. அதனால் சகல இனங்களையும் அரவணைத்துக்காெண்டு செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். .என்றார்.