சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கூறுவதை நம்ப முடியவில்லை!

275 0

சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் கூறுவது உண்மையென இன்னமும் நம்ப முடியாதுள்ளது.

 

நல்ல வேளையில் இருக்கும் பெண், குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட 10 நாட்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் உயிரைக்கூட பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைப்பாரா என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வேன் கலாசாரம்  உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கடத்தல் விடயத்தில் வெள்ளைவேன் கடத்தல் இடம்பெறவில்லை, அவர் அச்சுறுத்தப்படவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் என்னதான் கூறினாலும் அரசாங்கம் கூறுவது உண்மையென இன்னமும் மனசாட்சிக்கு ஏற்ப நம்ப முடியாது உள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்றால் அதனை நிருபிக்க அரசாங்கம் சரியான காரணிகளை முன்வைத்திருக்க வேண்டும்.

ஒரு நல்ல வேளையில் இருக்கும் பெண், குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் பெண் ஒருவர் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட 10 நாட்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் உயிரைக்கூட பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைப்பாரா? அதுவும் இவர்களின்  கடந்த கால அரசியல் செயற்பாடுகள் நன்றாக தெரிந்த ஒருவர் அவ்வாறு முறைப்பாடு ஒன்றினை செய்வாரா என சபையில் தெரிவித்தார்.