பிணைமுறி தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம்!

224 0

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் பிணைமுறி  தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தற்பொழுது பொருத்தமற்றது என சட்டமா அதிபரினால் தனக்கு எழுத்துமூலம் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

 

மத்திய வங்கியினால் விநியோகிக்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்திலும் சட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது பொருத்தமற்றது என சட்டமா அதிபர், தனக்கு எழுத்துமூலம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கடந்த ஜனவரி 3ஆம் திகதி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சபாநாயகர் சபையில் அறிவித்ததாவது,

இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்படும் திறைசேறி முறி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட அறிக்கையை, ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஜனவரி 03ஆம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தேன் என்பதை சபைக்கு அறியத்தருகின்றேன்.

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டுக்கு அமைய, மத்திய வங்கியினால் விநியோகிக்கப்படும் திறைசேரி முறி தொடர்பில் தற்பொழுது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்திலும் சட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம்.

எனவே இது தொடர்பான அறிக்கையை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தற்போதைய சூழலில் பொருத்தமற்றது என சட்டமா அதிபரினால் எனக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றார்.