உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை!-அமைச்சர் கரு பரணவிதாரன

320 0

karunarathne-paranavitharanaநீதிப்பொறிமுறை குறித்த உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஒருபோதும் நாடாது என்ற கோட்பாட்டில் அரசாங்கம் திட்டவட்டமாக உள்ளது என ஊடகத்துறையின் பிரதி அமைச்சர் கரு பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அந்தவகையில் பொறுப்புக்கூறல் விடயத்திலும் அரசாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறையையே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விசாரணை செயற்பாட்டில் எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் உள்ளீர்க்காது. மாறாக உள்நாட்டிலுள்ள நீதிபதிகளைக் கொண்டே நாங்கள் விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்போம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதித்துறையின்மீது மக்கள் நம்பிக்கையற்றிருந்தனர். ஆனால் தற்போது நாங்கள் நீதித்துறை சுயாதீனமானது என்பதை நிரூபித்திருக்கின்றோம். எனவே உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை. எமது உள்நாட்டு நீதிபதிகள் இதனை சிறப்பாகச் செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.