போர்க் குற்றங்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சர்வதேச சக்திகள் முயற்சித்து வருகின்றன. முன்னைய ஆட்சியாளர்களை போல சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை. அதேபோன்று ஜெனிவா பிரேரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சர்வதேச சக்திகளுக்கு அடிபணிந்தே ஆட்சி செய்தது.. சர்வதேச கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு சர்வதேச சக்திகளுக்கு முன்னாள் மண்டியிட்டு நாட்டினை தவறான திசையில் கொண்டு சென்றது. ஆனால் நாம் இன்று உருவாக்கியுள்ள அரசாங்கம் ஒருபோதும் சர்வதேச அமைப்புகளுக்கோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கோ புலம்பெயர் அமைப்புகளுக்கோ அடிபணிந்து செயற்படாது.. எமது கொள்கை தேசியத்தை கட்டியெழுப்பும் கொள்கையாகும். ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவான சிந்தனையில் உறுதியாக தேசிய வாதக் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நாம் சர்வதேச சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம்.
பொதுத் தேர்தலில் நாம் முன்வைக்கும் கொள்கைகள் அனைத்துமே மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கையாக அமையும். பொம்மை ஆட்சியை கொண்டு செல்லாது நாட்டுக்கு ஏற்ற கொள்கைகளுடன் அவசியமான உடன்படிக்கைகளுடன் நாம் எமது அரசாங்கத்தை கொண்டு நடத்துவோம். இதில் சர்வதேச உடன்படிக்கைகள் குறித்து இன்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன
குறிப்பாக அமெரிக்காவுடன் செய்துகொள்ள முயற்சிப்பதாக கூறப்படும் விடயத்தில் அமைச்சரவையில் உறுதியான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .இப்போதைக்கு இந்த உடன்படிக்கைகள் எதனையும் செய்துகொள்வதில்லை என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த ஆண்டு மீண்டும் ஜெனிவாவில் இலங்கை விவகாரங்கள் கையில் எடுக்கப்படும். இன்று புதிய அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில், சர்வதேச சக்திகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன. இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாக முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட காரணிகளை முன்வைத்து எமது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசாங்கம் நிராகரிக்கும். பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது இராணுவத்தை பழிவாங்க நினைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்றார்.