இளம் தாயும் இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக கிணற்றில் இருந்து மீட்பு!

285 0

வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுடன் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை அயல் ஊராகிய ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நுண்கருத் திட்டம் என்றழைக்கப்படுகின்ற நுண்கடன் திட்டத்தின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்ற கடனை தவணை தினத்தன்று திருப்பிச் செலுத்துவதில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்தத் தகராறின் பின்னர், முதல் நாள் கட்ட வேண்டிய கடனை மறுநாள் கட்டுவதற்காக இரண்டரை வயது மகனுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற மனைவியே மறுநாள் இவ்வாறு சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

புதிய வேலர்சின்னக்குளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயாராகிய  நாகநாதன் சுகந்தினியும் அவருடைய இரண்டரை வயதுடைய இரண்டாவது மகனாகிய நாகநாதன் கிந்துஜன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடனைக் கட்டிவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற மனைவியும், மகனும் மாலையாகியும் வீடு திரும்பாததைக் கண்டு கணவன் இராமநாதன் நாகநாதனும் (27) உறவினர்களும் தேடித் திரிந்தபோதே மறுநாள் அவர்களை ஆளில்லாத காணியொன்றின் கிணற்றில் இருந்து சடலங்களாகக் கண்டுள்ளனர்.

இந்தத் தாயார் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததனால் நுண்கருத் திட்டம் அல்லது நுண்கடன் திட்டத்தின் கீழ் கட்ட வேண்டிய கடனை உரிய தவணை தினத்தில் கட்ட முடியாமல் போனதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மறுநாள் உறவினர் ஒருவருடன் கைமாற்றாகப் பெற்ற பணத்தையே கடன் தவணையில் செலுத்துவதற்காக மனைவி புறப்பட்டுச் சென்ற பின்னர் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC