பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

347 0

downloadதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று குறித்த முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் பங்கேற்றிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளையான், கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.