நல்லாட்சி அரசாங்கத்தை 2015 ஆம் ஆண்டில் ஸ்தாபித்தோம். எனினும் அதனை மிக வேகமாக உருவாக்கிவிட்டோம் என்றே நான் கருதுகின்றேன். அதற்கு முன்னதாக அரச இயந்திரத்தைச் சுத்தம் செய்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் நல்லாட்சியை நிறுவியமையால் தற்போதும் சில குறைபாடுகள் உள்ளன. அதன் காரணமாக மக்கள் எதிர்பார்த்த அனைத்து விடயங்களையும் கடந்த காலத்தில் பூர்த்தி செய்வதற்கு எம்மால் முடியாமல்போனது என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கட்டுகம்பளை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: நாட்டுமக் களின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தை யும் உறுதிப்படுத்தும் நோக்கில் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின் றோம். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் நாட்டில் எவ்வாறானதொரு நிலை காணப்பட்டது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
அப்போது நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சியொன்றே நிலவியது. குடும்ப ஆதிக்கமொன்றும் காணப்பட்டது. நாட்டின் ஜனநாயகமும், சுதந்திரமும், சட்டமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்த வெள்ளை வான் யுகமொன்று இருந்தது. அதனை மாற்றியமைப்பதற்காக நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் ஊடாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றோம். அந்த வெற்றி பெருந்தொகையான பணத்தையும் விட விலைமதிக்க முடியாத பெறுமதியுடையதாகும்.
அத்தகைய வெற்றியின் மூலம் உருவாக்கிய ஜனநாயகத்தைத் தொடர்ந்து தக்கவைத் துக் கொள்வதற்காகவே தற்போது மீண்டும் ஒன்றிணைந்திருக்கின்றோம். எனவே இப்போராட்டத்தில் எம்மை வெற்றிபெறச் செய்வதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.