யாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்

308 0

யாழ். மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல்  கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையானார். மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

இதன்போது தனது தரப்பு சமர்பணங்களை முன்வைத்த சுமந்திரன் “யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது.

பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது” என கூறினார்.

மேலும் அனைத்து தரப்பு விவாதமும் நிறைவடைந்த நிலையில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைப்பதற்காக மனுவை வரும் டிசெம்பர் 6 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவித்தார்.