நாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்

194 0

இராணுவத்தினருக்கு கௌரவமாக வாழக்கூடிய சூழ்நிலை தனது ஆட்சிக் காலத்தில், உருவாக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு இந்த நாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் தம்முடனே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சரத் பொன்சேகாவுக்கான பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வழங்குவதுதான், எமது அரசாங்கத்தின் முதல் பதவியேற்பு நிகழ்வாக இருக்கும்.

இதனை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம். நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னர் அமையவுள்ள எமது அரசாங்கமானது, ஸ்திரத்தன்மையுடைய ஒன்றாக இருக்கும் என்பதை நான் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அனைவருக்கும், கௌரவமான சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவோம்.

இந்த நாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் சஜித் பிரேமதாசவுடன்தான் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.