டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதா?: மு.க.ஸ்டாலின்

325 0

201610301107074957_mk-stalin-condemned-dengue-fever-is-to-cover-up-by-saying_secvpfடெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று கூறி மறைப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே டெங்கு உள்ளிட்ட வி‌ஷக் காய்ச்சல்களுக்கு சிறுவர்-சிறுமிகள் பலியாகும் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பரிதாபத்தின் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் பகுதியைச் சேர்ந்த ஆபியா ஜாஸ்மின் என்ற 11 வயது சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அ.தி.மு.க அரசு இத்தகைய உயிர்ப்பலிகளை மறைப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துகிறதே தவிர, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையோ, நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையோ செய்வதில்லை என்பதை பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோரும் பொதுமக்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவும் போது அது குறித்த முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டிய தமிழக அரசின் சுகாதாரத்துறை, என்ன காய்ச்சல் என்பதைச் சொல்லாமல், ‘மர்மக் காய்ச்சல்’ என்று அறிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. மர்மக் காய்ச்சலுக்கு என்ன விதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதும் மர்மமான முறையிலேயே இருப்பதால் குழந்தைகள் பலியாவது தொடர்கிறது.

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பலியான நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை என்ற இடத்தில் வாந்தி மயக்கத்திற்குள்ளான 5 சிறுவர்களில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் சாதாரண குடிமகன்கள் என்ன வகையான காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே மர்மமாக இருப்பது பெரும் வருத்தமளிக்கிறது. தமிழக அரசு நிர்வாகம் நோயாளியாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை மோசமான நிலையில் இருக்கிறது.

நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான சிறுவர் சிறுமிகள் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தொடர்ந்து பலியாவதற்கு ஆளும் அ.தி.மு.க அரசும், சுகாதாரத்துறையும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பம்மல் சிறுமி ஆபியா ஜாஸ்மினின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்த சிறுமியின் மரணமே, டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான காய்ச்சல்களுக்கு கடைசி உயிர்ப் பலியாக இருக்க வேண்டும் என்பதை இந்த அரசிடம் வலியுறுத்துகிறேன்.

இனியும் மர்மக்காய்ச்சல் என்று சொல்லி மக்களை ஏமாற்றாமல் சிறுவர்-சிறுமியரின் உயிர் காக்கும் சிகிச்சைகளை வேகமாகவும் வெளிப்படையாகவும் அளித்து, உயிர்ப்பலிகளைத் தடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.