த.தே.கூவின் மீது ஐ.தே.க நம்பிக்கை

289 0

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை நல்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில் விராஜ் காரியவசம், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகுமென்றார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று  முன்தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், “கல்வி, பொலிஸ், வீதி அபிவிருத்தி, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்​களை பெருமளவில், ஐ.தே.க., கடந்தகாலங்களில் முன்னெடுத்தது” என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாபதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, தான் யுத்தம் செய்யவில்லையென ஒப்புகொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராக்கப்படுவார் என்ற அறிவிப்பு சிறந்தது என்றார்.

அரச ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்பதனால், அவர்களின் முழுமையான ஆதரவு, ​அமைச்சர் சஜித்துக்கு கிடைக்குமென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு பெற்றுகொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அமைச்சர் சஜித்துக்கான ஆதரவை கூட்டமைப்பு விரைவில் அறிவிக்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.