யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது ராஜபக்ஷாக்கள் அல்ல என்ற உண்மையை இறுதி நேரத்திலாவது கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பை போன்று இன்னும் ஓரிரு ஊடகவியலாளர் சந்திப்புக்கள் இடம்பெற்றால் மிக இலகுவாக அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோத்தபாய ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை போன்று இன்னும் ஓரிரு ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தினால் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மிக இலகுவாக இருக்கும்.
இதன் போது நூற்றுக்கு எண்பது வீதமான ஊடகவியலாளர்கள் நடைமுறைக்கு தேவையான பல கேள்விகளை மஹிந்த ராஜபகஷவிடமும் கோத்தபாய ராஜபக் ஷவிடமும் கேட்டமை பாராட்டக்கூடிய விடயம். காரணம் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இவ்வாறு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் ஊடகவியலாளர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு ஊடகவியலாளர்களால் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்ட போது பல சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக் ஷ பதிலளித்து கோத்தபாயவை காப்பாற்றிய போதிலும் இறுதி கட்டத்தில் அவராலும் நிலைமையை சமாளிக்க முடியாமல் போனதால் போதும் என்று கூறிவிட்டார். அன்றைய தினம் மஹிந்த ராஜபக் ஷ அங்கு இருந்திராவிட்டால் கோத்தபாயவால் எந்த கேள்விக்கும் பதிலளித்திருக்க முடியாது.
இதன் போது கல்விக்கு கூடிய நிதியை ஒதுக்குவதாக கோத்தபாய கூறிய போது, அந்த நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று கேள்வியெழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று புரியாமல் கோத்தபாய, மஹிந்தவின் முகத்தைப் பார்க்கின்றார்.’2005 இல் யுத்தத்தை நிறைவு செய்ய எவ்வாறு நிதி பெறுவீர்கள் என்று அப்போது என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. எனினும் அதனை நான் செய்து காட்டினேன்.
அதே போன்று இதையும் செய்து காட்டுவேன்’ என்று அந்த கேள்விக்கு மஹிந்த பதிலளிக்கின்றார். பிரதான ஜனாதிபதி வேட்பாளரை நியமித்திருக்கின்ற தரப்பிலுள்ளவர்கள் இப்படியா பொறுப்பற்ற வகையில் பதில் கூறுவார்கள்? இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இருவர் பயந்து அமர்ந்திருந்ததைப் போன்றே தோன்றியது.
இதே போன்று காணாமல் போன இராணுவத்தினர் பற்றியும் காணாமல் போன சாதாரண மக்கள் பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விக்கும் நழுவும் வகையிலேயே பதிலளித்தார். அவர்களது ஆட்சி காலத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு தவறை திருத்திக் கொள்வதாக அல்லது தீர்வு வழங்குவதாகக் கூறியிருக்க வேண்டும். நல்லவற்றை மாத்திரம் தாம் செய்ததாக கூறிக்கொண்டு, ஏனைய விடயங்களை மற்றவர்கள் பக்கம் திருப்பிவிடுவதை சிறந்தவொரு தலைவர் செய்ய மாட்டார்.
யுத்தத்திற்கு தான் தலைமை வகிக்கவில்லை என்று கோத்தபாய கூறிய பின்னர் விமல் வீரவன்சவினுடைய முகம் மாறிவிட்டது. இத்தனை காலமும் ராஜபக் ஷ குடும்பம் தான் யுத்தத்தை நிறைவு செய்தது என்று தேர்தல் பிரசார மேடைகளில் கூறிக்கொண்டிருந்தார்கள். இனி எவ்வாறு அதைக் கூறுவது என்று அவருக்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது. எவ்வாறிருப்பினும் கடைசி நேரத்திலாவது நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறியதற்கு கோத்தபாயவுக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.
பழைய குற்றச்சாட்டுக்கள் குறித்த நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ‘நான் எதிர்கால ஜனாதிபதி. அதனால் என்னிடம் பழையவற்றை கேட்காதீர்கள்’ என்று பதிலளிக்கின்றார். அவ்வாறு பழமையை மறந்து வாழ முடியுமா என்று மீண்டும் கேள்வியெழுப்பிய போது ‘ஆம்’ என்று கூறுகின்றார். அது எவ்வாறு சாத்தியமாகும். முன்னர் நடந்த கொலை சம்பவங்கள், ஊழல் மோசடிகள் அவை தொடர்பான வழக்குகள் என்ற அனைத்தையும் மறந்து அவரை ஒரு புது மனிதராக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோத்தபாய எதிர்பார்க்கின்றார். தவறு செய்திருந்தால் முதுகெழும்புடன் அதனை ஏற்றுக் கொள்வதோடு, மீண்டும் அந்த தவறு இடம்பெறாமல் தடுக்கின்றேன் என்று உறுதியளிக்க வேண்டும்.
கோத்தபாய ராஜபக்ஷ எம்முடன் வாத விவாதத்தில் ஈடுபடத் தேவையில்லை. அடுத்த ஐந்து வருடத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களைக் கூறுவார். அதே போன்று கோத்தபாயவும் அவர் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் கோத்தபாயவுக்கு பகிரங்கமாக விவாதிக்க முடியாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது என்றார்.