கிழக்கு மாகாணத்திலிருந்து சஜித் பிரேமதாசவுக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளை சிதைப்பதற்காக பசில் ராஜபக் ஷவின் ஆலோசனைக்கு அமைவாகவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். கோத்தபாய ராஜபக் ஷ வுக்கு ஆதரவு வழங்குகின்ற முஸ்லிம்கள் தேசப்பற்றாளர்களாகவும் ஆதரவு வழங்காதவர்கள் நாட்டைப் பிரிக்கும் துரோகிகளாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவினர், பெரும் தேசப்பற்றாளர்கள் என்ற போர்வையில் இன,மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவதைக் காணமுடிகின்றது. நாட்டின் காணிகளும், சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட போது அமைதியாக இருந்தவர்களும், பெருமளவான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுமே தற்போது தேசப்பற்றாளர்கள் போன்று பேசுகின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். அவை தொடர்பில் அறிவுபூர்வமாக சிந்தித்து தீர்மானிப்பார்கள் என்பது இன்னமும் இந்த நாட்டுப்பற்றாளர்களுக்குப் புரியவில்லை.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாடு பிளவுபடும் என்றும், தனித்தனியான ஆட்சி நிர்வாக உரிமை வழங்கப்படும் என்றும் கூறுகின்றார்கள். சஜித் பிரேமதாசவின் ஆட்சி என்பது அபிவிருத்தியையும், புதிய கொள்கைத் திட்டங்களையும் நோக்கியதொரு யுகமாகவே அமையும். அப்போதும் இலங்கை ஒருமித்த நாடாகவே இருக்கும் என்பதுடன், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், ஏனைய மதங்களைப் பின்பற்றுவதற்கான சுதந்திரமும் கௌரவமும் வழங்கப்படும். முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பேருவளையில் ஒருவிதமாகவும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கிளிநொச்சியில் ஒருவிதமாகவும் பேசுகின்றவர்கள் நாங்களல்ல.
கிழக்கு மாகாணத்திலிருந்து சஜித் பிரேமதாசவுக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளை உடைப்பதற்காக பசில் ராஜபக் ஷ வின் ஆலோசனைக்கு அமைவாகவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். இவ்வளவு காலமும் அவருக்கு எதிராகவும், அவருடைய ஷரிஆ பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் கடுமையாகக் கருத்து வெளியிட்டு வந்த ரத்னதேரருக்கு, தற்போது ஹிஸ்புல்லாஹ் தேசப்பற்றாளர் போன்று தெரிகின்றார். கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்குகின்ற முஸ்லிம்கள் தேசப்பற்றாளர்களாகவும், ஆதரவு வழங்காதவர்கள் நாட்டைப் பிரிக் கும் துரோகிகளாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர்.
அடுத்ததாக தற்போது மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ ஆகிய இருவரில் யார் வேட்பாளர் என்பதிலும் அவ்வப்போது சந்தேகம் ஏற்படுகின்றது. வேட்புமனுத்தாக்கலின் பின்னர் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது கருத்தை வெளியிட்டார். ஆனால் எதிர்த்தரப்பில் மஹிந்த ராஜபக் ஷவே கருத்து வெளியிடுகின்றார். அவருக்குப் பின்னாலேயே கோத்தபாய ராஜபக் ஷ இருக்கின்றார். எனவே தான் உண்மை யாரை வேட்பாளர் யார் என்ற கேள்வியை எழுப்புகின்றோம்.
அனைத்து இன, மதங்களைச் சார்ந்தவர்களும் சமத்துவமாக ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒருமித்த இலங்கையை உருவாக்கும் நோக்கிலேயே டீ.எஸ்.சேனாநாயக்கவினால் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. எனவே ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தற்போது இரண்டு பக்கங்களே உள்ளன. அவற்றில் உண்மையான நாட்டுப்பற்றுடன் முன்நோக்கிப் பயணிக்கக்கூடியவர்களைப் பின்பற்றிச் செல்வதா அல்லது தேசப்பற்று என்ற போர்வையில் அனைத்துவித ஊழல்களையும் செய்பவர்களை ஆத ரிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்கு சிறந்த கொள்கையுடன் திட்டமிட்டுப் பணியாற்றும் தலைவரொருவரே தேவையே தவிர, சர்வாதிகாரியொருவர் தேவையில்லை.
யுத்த காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ இருவரும் குளிரூட்டப் பட்ட அறையில் தங்கியி ருந்தபோது பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவே யுத்தத்தை முன்நின்று நடத்தினார். அதற்கான கௌரவத்தை அவருக்கு வழங்கும் விதமாகவே இன்று சரத்பொன்சேகா எமது கட்சியின் உறுப்பி னராக இருக்கின்றார்.