மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு

247 0

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நேற்று 24 ஆயிரத்து 169 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.மேட்டூர் அணைக்கு கடந்த 8-ந் தேதி நீர்வரத்து 10 ஆயிரத்து 396 கன அடியாக இருந்தது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று நீர்வரத்து 24 ஆயிரத்து 169 கன அடியாக அதிகரித்தது.இந்த நிலையில் நீர்வரத்து இன்றுமீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கி உள்ளது.

நேற்று 116.97 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 116.73 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீரவரத்து மேலும் குறையும்போது நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.