வல்லப்பட்டை தொகையுடன் இளம் வர்த்தகர் கைது

214 0

வல்லப்பட்டை தொகை ஒன்றை சட்டவிரோதமாக டுபாயில் இருந்து கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று (01) இரவு கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

22 வயதுடைய கிரிவுல்ல, பன்னல பிரதேசத்தை சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 6.25 மணி அளவில் டுபாயில் இருந்து புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.225 ரக விமானத்தில் குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.

அவர் தனது பயணப்பொதியில் குறித்த வல்லப்பட்டை தொகையை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 12 இலட்சத்து 50 ஆயிரத்து 350 ரூபாய் பெறுமதியுடைய 22 கிலோ 950 கிராம் வல்லப்பட்டை துண்டுகளும் மற்றும் 300 கிராம் வல்லப்பட்டை எண்ணெய் தொகையும் சுங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், வல்லப்பட்டை தொகை அரசுடமையாக்கப்பட்டு, குறித்த வர்த்தகருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.