ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

222 0

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டு போடுவதற்கு வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

ஆப்கானிஸ்தானில் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு இடையே மீண்டும் போட்டி நடைபெறும்.

அதிபர்பதவிக்கான போட்டியில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி(சுயேட்சை),  தலைமை நிர்வாகியான அப்துல்லா அப்துல்லா (ஆப்கானிஸ்தான் தேசிய கூட்டணி) உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.