குமார வெல்கமவின் கருத்தில் எவ்வித தவறுமில்லை – எஸ்.பி.

279 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார் என்று குமார வெல்கம தெரிவித்துள்ளதில் எவ்வித தவறும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பத்தரமுல்லவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்தமைக்கு அதிருப்தி தெரிவித்து அவர் நீண்ட காலம் பொது எதிரணியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் செயற்பட்டார்.

கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து இணக்கம் தெரிவித்த போது கூட குமார வெல்கம மாத்திரமே நேரடியாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதே போன்று அவர் இறுதிவரை அரசாங்கத்தில் இணையவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் இணையாதது மாத்திரமின்றி வேறு கட்சியில் இணையவுமில்லை. எனவே அவர் தயாசிறி , டலஸ் அழகப்பெரும ஆகியோரை விடவும் சிரேஷ்ட உறுப்பினராவார். எனவே தான் அவர் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று நான் கூறுகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.