6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் : சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

323 0

நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரையில் 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

கடந்த 19 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கடந்த 19 ஆம் திகதி மாலம்பே பிரதேசத்தைச் சேர்ந்த கெடகொட கமகே ஜயந்த பெரேரா மற்றும் கிரிவத்துவுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறிபால அமரசிங்க ஆகிய சுயாதீன வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். மேலும் இலங்கை சமவுடைமை கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அஜந்தா வீரசிங்க பெரேரா என்பவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

20 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த சுயாதீன வேட்பாளரான அபரெக்கே புஞ்ஞானந்த தேரர் , எமது மக்கள் என்ற கட்சி சார்பில் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த வெலியரகே சமன் பிரசன்ன பெரேரா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் நந்தசேன கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இவற்றுக்கமைய இது வரையில் சுயாதீன வேட்பாளர் மூவரும் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.